ஏமாற்றங்களின் நெடும் பயணம்

தொடரும் ஏமாற்றங்களின்
நெடும் பயணத்தை
மீண்டும் புதுப்பித்திருக்கிறாய்
நீ………..

விடு
குட்டக்குட்ட குனியும்
என் இயலாமையை
சொல்ல வேண்டும்

வரங்களை சாபங்களாக்கிய
தேவதை உனக்காகவா
நான் கடுந்தவம் புரிந்தேன்…?

எனக்கு நிழல் தரும்
என்றெண்ணிய உன்
வார்த்தைகள்
சுட்டெரிக்கும் சூரியனாய்
பொசுக்குகிறது
என்னையும்
மனசையும்…..

பௌர்ணமி வானில்
நீ என்ன
வேண்டுமானாலும்
செய்..
ஆனால்
அமாவாசை வானின்
நட்சத்திரங்களை மட்டும் பிடுங்கி விடாதே…………

-நிந்தவூர் ஷிப்லி தென்கிழக்கு பல்கலை இலங்கை

Captured while maiden book was released...




தொலைதூர அழுகுரல்

பூச்சாண்டி வருவதாக
அன்னை ஊட்டிய
ஒரு பிடிச் சோற்றின்
உயிர்ச்சத்தில்
உதயமானது என் கிராம வாழ்வு

புழுதிக்காற்றின்
மண்வாசனையில்
எத்தனை முறை
நுகர்ந்திருக்கிறேன்
தாய் மண்ணின் சுகந்தத்தை....

மழை நாள் பொழுதுகளில்
தெருவெல்லாம் திரண்டோடும்
அழுக்கு நீரில் கால்
நனைத்து
கழுவியிருக்கிறேன் நினைவுகளை....

நிலாச்சோறு
திருட்டு மாங்காய்
சைக்கிள் விபத்து
முதல் காதல்
இன்னும் எத்தனை நினைவுகள்
என் உயிரோடு ஒட்டியபடி....

அத்தனையும் துறந்து
உலக வரைபடத்தில் மட்டுமே
தாய்நாட்டை காண முடியுமான
ஒரு தேசத்தில் நான்....

பணம் சம்பாதித்துக் கொண்டே
இருக்கிறது
என் உடல்

உயிர் மட்டும்
இன்னும் என் தெருமுனையின்
பனைமரத்தடியில்.....!


நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை mailto:shibly591@yahoo.com

வாழ்க்கை

விடையில்லாத
விடுகதை
இது
சில சமயம்
கடல்நீர்
சில சமயம்
கானல் நீர்

இதன் விரல்
நுனியில்தான்
மனிதர்கள்
பொம்மைகள்.....

கனவு,
ஆசை,
காதல்,
பாசம்,
உறவு
பரிவு
என்றெல்லாம்
ஏராளம் ஏராளமமாய்
இதன் பிடியில் முகமூடிகள்
விளையாடு களமாய்,
நாடக மேடையாய்,
களியாட்ட அறையாய்
எப்படியோ
பாவித்தாக வேண்டும் இதை

கருவறையில்
விழித்த பின்
நிஜங்களின் ராஜ்ஜியமாய்...
கல்லறையில்
உறங்குமுன்
போலிகளின் நாட்டியமாய்
இரு முகங்கள் இதற்கு.

ஆயினும்,
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்!
சாகும் பொழுதைத்தவிர......

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை


கருக்கலைப்பு


ஜனனங்களுக்காய்

படைக்கப்பட்ட

கருவறைகள்..

இன்றோ

மரணங்களுக்கான

கல்லறையாய

புதிய பரிமாணம்


உயிரணுக்களின்

உயிர்கள்

அணுவணுவாய்

கொல்லப்படுகிறது

மருத்துவச் சித்ரவதைகளுடன்....


தொப்புள்கொடிகளே

தூக்குக்கயிறுகளாகின்றன

இந்தக்கருக்கலைப்பில்....“


புக்களை தீயிட்டு

எரிப்பதைப்போல”

என்பதை தவிர

வேறெந்த உவமைகளும்

பொருந்தப் போவதில்லை

இந்த அகால மரணங்களுக்கு...


மனிதாபிமானம்

செத்துப்போய்விட்டதை

பகிரங்கமாய் பறைசாற்றுவதற்கா

சிசுக்கொலைகள்...?


உண்டான பிறகு

சிதைப்பதை விட்டுவிட்டு

உண்டாகும் முன்

சிந்தியுங்கள்

ஏனெனில்நீங்கள்

சிதைப்பது உயிர்களை அல்ல

இவ்வுலகின்

நாளைய விடிவை !


நிந்தவூர் ஷிப்லி



இருட்டு உலகம்



தனிமையின்
நிழலில்
பெருமூச்செறிந்தபடி
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாழ்க்கை

விடிய முன்னும்
விடிந்த பின்னும்
துயரங்களை
சுவாசித்து
சொட்டுச் சொட்டாய்
உயிரிழக்கிறது
வாழ்தல் மீதான
நம்பிக்கை

வலிகளின்
பிடிமானங்களில்
கவனமாய் செருக்கப்பட்டிருக்கிறது
உடலும், உயிரும்.....

நிலவு தொலைந்த
இருட்டு உலகாய்
இன்னும் புலப்படாமல்
மனிதர்கள்

நிறைவேறாத
ஆசைகளின்
நீள்வட்டப் பாதையில்
தறிகெட்டுத் தவிக்கின்றன
நகரும் வினாடிகள்

விழிநீரின்
விம்பங்களில்
அப்பட்டமாய்த் தெரிகின்றன
புன்னகைகளின்
புதைகுழிகள்

குற்றுயிரின் உளறலாய்
விளங்கவும் முடியாமல்
விலக்கவும் தெரியாமல்
உணர்வு என்ற பெயரில்
சில ஊசல்கள்.....

நீளும் ரணங்களின்
அழுத்தத்தில் புதைந்து
இன்னுமின்னும்
உயிர்வாழ
எனக்கு விருப்பமில்லை
மரணத்தின் திசைநோக்கி
நடக்கிறேன்

மிக மிகத்
தொலைவில்
என்னை வரவேற்றுக்
காத்திருக்கிறது அது!

நிந்தவூர் ஷிப்லி, தென்கிழக்கு பல்கலை, இலங்கை

அர்த்தமில்லாத அவஸ்தைகள்

உனதுகண்ணீரில்
நனைந்து போனது
எனது மனசு

இருவரதும்இறுக்கத்தை
அதிகப்படுத்தும்
அல்லதுகுறைக்கும்
நம் மௌனங்கள்
கண்ணீரிலா முடிய வேண்டும்?

தனிமையில்
நம் பிரிவின் வலிகளில்
நான் வடிக்கும்கவிதைகளில்
நிறையவே பொதிந்துகிடக்கின்றன
சில கண்ணீர்த்துளிகளும்
சில இரத்தத்துளிகளும்

நினைவுகளை
பின்னோக்கிநகர்த்திவிட்டு
இனி ஒரு போதும்
நிகழ முடியாதஅந்த நாட்களில்
புதைந்து கிடக்கிறேன்

வசந்த காலஇலைச் சருகின்
முனகலும்
மயான வெளியில்
பறவைகளின்அலறலும்
சிந்தனையின்வெற்றிடத்தை
நிரப்பிக் கொண்டிருக்கின்றன

நீ பற்றியஞாபகங்கள்
நொந்துபோன
மனசின் பரப்புகளில்
அர்த்தமில்லாத அவஸ்தைகளாய்
கனக்கின்றன

ஒரே ஒரு கேள்வி
அகால மரணமாய்
திடீரெனச் செத்துப்போனதே
நம் உறவு

எப்படி
நேர்ந்தது
அது?