வாழ்வின் துயர் நிறை தருணங்கள்


வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு

அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்

துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்

அதற்கான கனவுகளை மட்டும்

சிறகடிக்க விட்டு விட்டு

தனித்தலையும் ரண மழையில்

கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்

கண்ணீர் அறைகூவலை

எப்போதும் அதன் சோகம் கவிந்த

கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத

கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்

தவறாக வாழப்பட்ட

அல்லது

வாழ்தலில் நேர்ந்த தவறாக

ஏதோ ஒரு பிரளயத்தைசாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது

எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது


ஷிப்லி