மிக அண்மையில் பிரபலமாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் "ஸ்லம்டக்
மில்லியனர்"என்கிற ஆங்கிலம் கலந்த இந்த ஹிந்தி திரைப்படம் இந்திய
சினிமாவை உலகத்தரம் வாய்ந்ததாக மீண்டும் ஒரு முறை
பறைசாற்றியிருக்கிறது.ஏற்கனவே லகான், ஓம் சாந்தி ஓம், ஜோதா அக்பர் போன்ற
படங்கள் உலகெங்கும் பிரபலமாகி இந்திய சினிமாத்தரத்தை வெகுவாக
திரும்பிப்பார்க்க வைத்தன.ஆனால் எந்தவொரு ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சில
பிரபலங்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்தப்படம் சாதித்துக்கொண்டிருக்கும்
ஏன் சாதிக்கப்போகும் மைல்கல்கள் ஏராளமோ ஏராளம்.

செலடார் பிலிம்ஸ் தயாரிப்பில் டென்னி போயெல் இயக்கிய இந்தப்படத்தில் துணை
இயக்குநராக லவ்வீன் தண்டலும், திரைக்கதையை சைமன் பபேயும்
வடிவமைத்துள்ளனர்.தயாரிப்பாளராக கிரிஸ்டியன் கொல்ஸனும், நாயகனான ஜமாலின்
இளமைப்பருவ கதாபாத்திரத்தில் தேவ் பட்டேலும், ஜமாலின் சிறுவர்பருவத்தில்
தனய் சேடாவும், துறு துறு குழந்தைப்பருவ கதாபத்திரத்தில் அயூஸ் மகேஸ்
கடேகரும் நடித்திருந்த அதேவேளை நாயகியாக பிடே பிந்தோவும், கௌரவ வேடத்தில்
அனீல் கபூரும், போலீஸ் துப்பறிவாளனாக இர்பானும் பாத்திரமறிந்து
நடித்ததோடு முகம் காட்டாமல் அனைத்து ரசிகர்களையும் இசையால்
கட்டிப்போட்டிருப்பவர் நம் இசைப்புயல் ஏ.ஆர.ரஹ்மான்.


இனி கதையின் விளிம்பிற்கு வருவோம்.படம் ஆரம்பிக்கும்போது பார்வையாளர்களை
நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.அது இதுதான் "ஜமால் 20 மில்லியனை
எவ்வாறு வெற்றி கொண்டான் ? முதல் விடைத்தெரிவு "அவன் ஒரு
ஏமாற்றுக்காரன்", இரண்டாவது விடைத்தெரிவு "அவன் அதிர்ஸ்டசாலி", மூன்றாவது
விடைத்தெரிவு "அவன் பெரும் அறிவாளி", நான்காவது விடைத்தெரிவு "அது
எழுதப்பட்ட விதி".அதற்கு விடைதான் முழுப்படத்தின் கதையுமே.

ஒரு தெருவோரப்பிச்சைக்காரனான ஜமால் 20 மில்லியனை ஒரு தொலைக்காட்சி
நிகழ்ச்சியில் வென்று விடுகிறான்.அவன் ஏமாற்று வித்தைக்காரனாக இருக்கலாம்
என்று போலீஸ் சந்தேகித்து அவனை கைது செய்து மிகக்கொடுமையாக
விசாரிக்கிறது.பெரும் பெரும் அறிவாளிகளால் வெல்ல முடியாத பரிசை ஒரு
சாதாரண மனிதன் நீ எப்படி வெற்றி பெற்றாய் என்று அதட்டும் போலீசுக்கு
எனக்கு விடைகள தெரிந்திருந்ததால் நான் வென்றேன்" என்று சொன்னதுமே
தியேட்டர் நிமிர்ந்து உட்கார்கிறது.அவனிடம் கேட்கப்பட்ட ஒவ்வொரு
கேள்விக்கும் அவன் எதை அடிப்படையாக வைத்து விடை சொன்னான் என்கிற பாணியில்
விரிகிறது கதை.


உண்மையில் ஜமாலாக நடித்த துறு துறு பையனும் சரி, சிறுவனும் சரி, இளைஞனும்
சரி இயல்பான நடிப்பில் நம்மை கட்டிப்போடுகிறார்கள்.படம் முழுவதும்
யதார்த்தம் நிரம்பி வழிகிறது.ஆரம்பத்தில் காட்டப்படும் கிராமம் அழுக்கு
நிறைந்த சேரிப்பகுதிகளின் உண்மை முகங்களை நமக்கு வெட்ட
வெளிச்சமாகக்காட்டுகிறது.அதேபோல கதையின் வழியே இணைந்து ஓடும்
கதாபாத்திரங்களும் யதார்த்தமாகவவே
வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள்.உதாரணத்துக்கு போலீஸ்காரர்களையும் பாதிக்கப்பட்ட சிறுவர்களையும் இடையிடையே வரும் வன்முறைகளையும் கோடிட்டுச்சொல்ல முடியும்.


மில்லியன் பரிசப்போட்டியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜமாலின் வhழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவங்களும் விடையாக கோர்க்கப்பட்டிருக்கும் பாணி அற்புதமானது.விடையளிக்கும்போது தனது முகபாவங்களாலேயே நம்மையெல்லாம் நாயகன் வென்று விடுகிறான்.மேலும் பம்பாயில் குழந்தை கடத்தல்கள் விபச்சாரம் கேங்ஜஸ்டர்களின் ஆதிக்கம் போன்றனவும் ஆபாசமோ வன்முறையோ தலை தூக்காவண்ணம் மிக நுணுக்கமாக கையாளப்பட்டிருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு சபாஷ்.

ஜமாலும் அவனது சகோதரனும் ரயிலில் செய்யும் திருட்டுக்களும் தாஜ்மகாலுக்கு வரும் வெளிநாட்டவர்களிடம் அவர்கள் தாஜ்மகாலைப்பற்றி விளக்கும் காட்சிகளும் அமிதாப்பச்சனைக்காண ஜமால் மலசல கூடத்துக்குள் குதித்து எழும்புவதும் அழகான நகைச்சுவைகள்.அதேபோல நாயகி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும்போதும் ஜமாலின் கண்ணெதிரே அவனது சகோதரன் அவளை கற்பழிப்பதும் கண்ணீர்க்காட்சிகள்.தனது காதலியே ஜமாலை உடலுறவுக்கு அழைத்தும் அவன் மறுப்பதும் அவள் விபச்சாரியாக இருந்து திருந்தியவள் என்று தெரிந்தும் தொடர்ந்து அவன் அவளை தேடுவதும் உணர்ச்சிப்பிரவாகம்.

படத்தில் மிக முக்கியமாக சொல்லப்பட வேண்டிய ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான்.யதார்த்தமாமான கதைக்கு உயிரோட்டமாக இசையமைத்துள்ளார்.கிராமியம் கலந்த சிறுவர்களுக்கு ஒரு விதமாமாகவும் சோகக்காட்சிகளுக்கு இன்னொரு விதமாகவும் மில்லியனர் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் வெவ்வேறு விதமாகவும் "மல்டி மியூசிக்கல் சோ" வையே ரஹ்மான் நிகழ்த்திக்காட்டுகிறார்.வெல்

டன் ரஹ்மான்.இதற்காக அவருக்கு "கோல்டன் குளோப்" விருது தகுதியானதுதான்.ஆஸ்காரையும் அவர் வெல்வார் என்று திடமாக நம்பலாம்.

கடைசியாக எவ்வாறு போலீஸ் ஜமாலையை நம்பி விடுதலை செய்கிறது என்பதும் ஜமாலின் காதலுக்கு என்ன நடக்கிறது எனபதும் படத்ததைப்பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.ஆரம்பத்தில் கேட்கப்பட்ட ஜமால் 20 மில்லியனை எப்படி வென்றான் என்ற கேள்விக்கான விடையும் காட்டப்படுகிறது.

மொத்தத்தில் மிக அழகான ஒரு படத்தை பார்த்த திருப்தியை இந்தப்படம் தருகிறது.இரண்டே மணித்தியாலங்களுடன் முடிகின்ற இந்தப்படம் இரண்டு மூன்று நாட்கள் நமக்குள் அதிர்வை ஊற்படுத்துவதே படத்தின் மிகப்பெரிய வெற்றி.இந்திய சினிமாவில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்திருக்கிறது "ஸ்லம்டக் மில்லியனர்".

இருள் சூழ்ந்ததொரு அடர்ந்த வனாந்தரத்தின்
அசையும் ஒரு இலையென
எவர் கண்ணிலும் எட்டுவதாயில்லை
என் கண்ணிலிருந்து உகுக்கும்
பலப்பல கண்ணீர்த்துளிகளும் கனவின் கலைதலும்...

தனிமைத்தீயில் யதேச்சையாய் சிக்குண்ட
என் விதிக்கப்பட்ட கணங்களிலிருந்து
சிக்கிச்சின்னாபின்னமாகி சாம்பலாகிப்போனது
சில நினைவுகளும் அது சார்ந்த நிதர்சனங்களும்...

மழைநாள் மண்வாசமாய்
உயிரின் வேர்ப்பரப்பிலிருந்து
நினைவுகள் நனைக்கும் ஞாபக எச்சங்களின்
எழில் கோலங்கள் மொத்தமும்
முற்றுப் "புள்ளி" என்றாகிப்போன பின்
எதற்கிந்த வேசம்...?எதற்கிந்த சுவாசம்...??

உடைந்து போன புல்லாங்குழல் வழியே
கசியும் ஒரு ஏகாந்த இசையென
காற்றின் சுவடுகள் பற்றி
எங்கெல்லாமோ மிதந்து கொண்டிருக்கிறேன்...

நீளும் திசை வழியே
என் பாதையற்ற பயணம்
கானல் முகங்களில் மோதுண்டு
செய்வறியா பேரதிர்ச்சியுடன்
காகிதக்கப்பலாய் தத்தளிக்கிறது..

சுய கழிவிரக்கம் குறித்தான என்
நிசப்தப்புலம்பல்கள்
ஒரு வசந்தத்தின் பாடலுக்காய்
அழுதபடி தவமிருக்கிறது..

நிர்மூலமான நிகழ்காலத்தின்
மிக மெல்லிய இடுக்குகளில் கசியும்
நம்பிக்கைச்சூரியனும்
மெல்ல மெல்ல ஒளியிழக்கிறது
காலத்தின் கைகள் சுமந்திருக்கும்
இறுகிப்போன விலங்குகளை பார்த்த பின்பு.....

வாழ்வின் துயர் நிறை தருணங்கள்


வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது.....

சிறகொடிந்த அப்பறவைக்கு

அடுத்த திசைநோக்கிப்பறக்கும் வீரியம்

துளியேனும் கிடையாது..

விரிந்திருக்கும் வான்பரப்பில்

அதற்கான கனவுகளை மட்டும்

சிறகடிக்க விட்டு விட்டு

தனித்தலையும் ரண மழையில்

கொட்டக்கொட்ட நனைந்து கொண்டிருக்கிறது...

வலி மிகைத்த கவிதையொன்றின்

கண்ணீர் அறைகூவலை

எப்போதும் அதன் சோகம் கவிந்த

கண்களில் நீங்கள் காணக்கூடும்...

மீளமுடியாத

கனவுகளற்ற அதன் வாழ்வியல் கோலங்கள்

தவறாக வாழப்பட்ட

அல்லது

வாழ்தலில் நேர்ந்த தவறாக

ஏதோ ஒரு பிரளயத்தைசாற்றி நிற்கிறது..

வாழ்வின் துயர் நிறை

விகார தருணங்கள் மீது

எனது ஆயுள்

ஒரு பறவையைப்போல அமர்ந்துகொண்டிருக்கிறது


ஷிப்லி

Live interview on Rupavahini Television

May Almighty's peace be upon you,

I was invited by Rupavahini Television for a live
interview on 21st of June 2008.
It Can be watched via following links.

1. http://www.youtube.com/watch?v=yovuJtOW2nE

2.
http://www.youtube.com/watch?v=llKQ5PJUfR8

3.
http://www.youtube.com/watch?v=Q_l9dabJugA

4.
http://www.youtube.com/watch?v=TZsm2A1mKrY

5.
http://www.youtube.com/watch?v=ws7J_nAbZeU

6.
http://www.youtube.com/watch?v=g4eu6a44J7s

7.
http://www.youtube.com/watch?v=8QIeYzjXiwg

8.
http://www.youtube.com/watch?v=OSaEpBkcgRQ

9.
http://www.youtube.com/watch?v=1VLsFJRLI14

10.
http://www.youtube.com/watch?v=9ZWMJzLIT50

or simply go to

http://www.youtube.com/profile_videos?user=amjadfha

to get all ten links in one single page....

Thank you.

Regards from,

Shibly.


01)நினைவுகள்

மெல்ல மெல்லஇருளத்தொடங்கி

எனது சுயம் எங்கோ

விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அவனது கைத்துப்பாக்கியால்தான்

இது நேர்ந்திருக்கக்கூடும்.

மனைவிக்கு மருந்து வாங்கப்போன

வழியில்தான் இப்படியாயிற்று.

பாவம் எனது இரண்டு வயதுப்பெண்பிள்ளை.

நேற்று ஜோசியக்காரன் சொன்னது நினைவில் விரிகிறது..

"எனக்கு கெட்டியான ஆயுள் ரேகையாம்"


02)அண்மித்துக்கொண்டிருக்கும்

மரணம்

இருதயத்துடிப்பையும்

சுவாசப்பைகளையும்

சதுதியாய் பிடுங்க்துடிக்கிறது.

யார் யாரோவெல்லாம்

என்னைச்சூழ்ந்து புலம்புகிறார்கள்

"தலையில்தான் குண்டு"

"பாவம் இளம் வயது"

"இது நமது குமாரின்...."

"சுட்டவனை யாரேனும் பார்த்தீர்களோ..?"

"அந்தப்பக்கமாய் ஒருத்தன் ஓடினான்"

எனக்காக வாதாடும் குரல்களின்

முகங்களைக்காண முடியாமல்

எனது கண்கள் மூடப்பட்ணுடுவிட்டன.


03)

வாழ்வின் கடைசி நிமிடங்கள்

என்னை குரூரமாய் அணைத்துக்கொள்கிறது.

எனது கடைசி சுவாசத்தை நோக்கி

நானே வேகமாய் விரைகிறேன்.

கைகளும் கால்களும்

அசைவற்ற நிலையின் வாசலில்..

கண்களின் வழியே கண்ணீரும்

உடலின் வழியே இரத்தமும்

கொட்டிக்கொண்டேயிருக்கிறது.

ஒரு மரணத்தை எதிர்கொள்ளும் வலி

இதைப்படிக்கும் உங்களால்

உணரமுடிவது சாத்தியமற்றது.


04)

கடைசியாய் இதயம் துடித்தடங்கிய போது

மனைவியின் முகமும் குழந்தையின்

எதிர்காலமும் கேள்விக்குறியாய் கீறிக்கிழித்தது.

வாழ்வின் கடைசி நிமிட குரூர அணைப்பில்

எனது ஆத்மா கலக்கிறது.

"உயிர் போய்விட்டது"

என்று யாரேனும் அடையாளம் காண்பான்

அதுவரை நானும்

ஒரு அநாதைப்பிணம்


05)

நேற்றுவரை கமகமத்த

என் உடல் வழியே

பிணநெடி வீசத்தொடங்கிவிட்டது..

செத்த பிறகும்கொட்டிக்கொண்டேயிருக்கிறது

குருதியாற்றின் மத்தியில் உடல் மிதக்கிறது படகாய்..

"இனந்தெரியாதோரால்இளம் தகப்பன் படுகொலை"

என நாளை அச்சேறப்போகிறது

பத்திரிகைகளில் எனது மரணம்.

எதற்காக நான் கொல்லப்பட்டேன்?

என்னைச்சுட்டுப்பொசுக்கிய கரம் யாருடையது?

எந்த விடையும் என் போலவே

யாருக்கும் தெரியாது..

எனது ஆத்ம சாந்திக்காக

எல்லோரும் பிரார்த்திப்பார்கள்.

நேற்று யாருக்கோ நிகழ்ந்நதே

இன்று எனக்கு நிகழ்ந்நது..

இன்று எனக்கு நிகழ்ந்ததே

நாளை யாருக்கோ நிகழப்போகிறது

மரணம் என்பது சில்லறையாய்மலிந்து போன இத்தேசத்தில்.....


நிந்தவூர் ஷிப்லி

தென்கிழக்குப்பல்கலை

இலங்கை

ஷிப்லி எழுதிய "நிழல் தேடும் கால்கள்"
கவிதை நூல் வெளியீட்டு விழா


இலங்கை தென்கிழக்குப்பல்கலைக்கழக தமிழ்ச்சங்க வெளியீடாக

நீலாவணன் அரங்கில்

கவிஞர் நிந்தவூர் ஷிப்லி எழுதிய

நிழல் தேடும் கால்கள்(கவிதை நூல்)

இடம் :-கேட்போர் கூடம் தென்கிழக்குப்பல்கலை ஒலுவில் இலங்கை

காலம் :- 2008-04-23 புதன்கிழமை மதியம் 01.30 முதல்

பிரதம அதிதி :- கலாநிதி ஏ.ஜி.ஹீசைன் இஸ்மாயில் உபவேந்தர் தென்கிழக்குப்பல்கலை

அனைவரையும் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் வரவேற்கிறது

யாரிடம் போய்ச்சொல்லி அழ...............


யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலமபெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப்போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப்போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?


நிந்தவூர் ஷிப்லி
தென்கிழக்குப்பல்கலை
இலங்கை